Tuesday, September 4, 2012

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.

புத்தர் முதல்முதலாய் தடுமாறினார்.


------------------------------------------------------



என்ன..! எல்லம் அறிந்த ஞானி புத்தர்கூட தடுமாறினாரா..? உடனே என்ன அவசரம். எல்லாத்துக்கும் உங்களுக்கு அவசரம்தான்..! ஒன்னும் அவசரம் இல்ல. அதோ புத்தர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய ஆனந்தருடன் போகிறார். கொஞ்ச தூரம்தான்..! வாருங்கள் நாமும் அவர்களோடு பயணிப்போம்.

புத்தர் அந்த ஊருக்கு செல்ல தனது அரண்மனை வழியாக செல்லவேண்டியதாக இருந்கிறது. எப்படியும் அவரி...ன் ஊர் வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம் சந்திக்க வேண்டிவருமே. அப்படி அவர்களை சந்தித்தால்.., அவர்கள் மிக வருந்துவார்களே..! முக்கியமாய் அவரின் மனைவி யசோதா இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார் புத்தர். இருந்தாலும்.., எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய் நம்பினார். தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்ததும். மக்கள் குதூகலித்தனர்.. கூக்குரலிட்ட விழுந்து தொழுது எதேதோ செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.


அப்போது புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தர் கேட்டார். "உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..! எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது..?" புத்தர் சொன்னார், "அவர்கள் அன்பை வெளியில் தேடியும்.., கண்டுகொண்டும்விடுகிறார்கள். நானோ உள்ளே தேடவேண்டி இருந்தது. அதனால் வந்தேன்." என்றார். புத்தர் மீண்டும் சொன்னார். "ஆனந்தா.. நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்..!"


ஆனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான புதிதாக இடப்பட்ட தெருவில் கண்ணுகெட்டிய தூரம் வரை எந்த பள்ளமோ கல்லோ கட்டைகளோ இல்லை. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று சிந்தித்தபடியே நடந்தார்.


அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில்.திடீரென. ஒரு பெரும் கூட்டமாக மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர். சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.


அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண். வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல் புத்தரை நோக்கி வந்தாள். புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த பெண்ணின் கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.


அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.

"நலமா..?" என்றார் அந்த பெண்.


"நலம் யசோதா..!" என்றார் புத்தர்.


"ஒரு கேள்வி கேட்கலாமா..?" என்றாள் யசோதா.


"எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை...!


இந்த அரண்மனையிலேயே அடைந்திருக்க முடியாதா..?" என்றார்.


புத்தர் வாயெடுத்தார்..., ஆனால் சொல் வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை..!


இப்போதுதான் ஆனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார். எதுவும் பேசாமல் புத்தர் மெளனமாக அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். ஆனந்தருக்கோ ஆச்சரியம்..! புத்தரிடம் கேட்டார்.., "ஏன் தடுமாறினீர்கள் புத்தரே..?"


புத்தர் சொன்னார்.., "ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம். எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா..? அல்லது அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா..?" என்றார் புத்தர்.


ஆனந்தர் தெளிவாய் புன்னகைத்தார். புத்தருடன் பயணத்தை தொடர்ந்தார். நாமும் இவர்களோடு உள்ளோக்கிய பயணத்தை தெடர்வோமே..!



No comments:

Post a Comment