Tuesday, September 4, 2012

அவசியம் இல்லை.

அவசியம் இல்லை.




யோகி ஒருவர், தீவிரமான மௌனதை மேற்கொண்டிருந்தார்.

அவர் முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் பேசுவார். அதுவும் ஒரு நிமிடம்தான் பேசுவார். அதன்பிறகு மீண்டும் மௌனமாகிவிடுவார்.

இன்றைக்கு அந்த முப்பது வருடங்கள் முடியப்போகின்றன.

அந்தத் யோகியின் ஆசிரமத்தில் ஏகப்பட்ட பக்தர்கள் வந்து குவிந்திருந்தார்கள். எல்லோரும் அவருடைய ஒரு நிமிடப் பேச்சைக் கேட்டுவிடவேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார்கள்.


யோகி, "எல்லோருக்கும் வணக்கம்..!"

ஒருவர் கேட்டார், "நீங்கள் இப்படி மௌன விரதம் இருக்க ...வேண்டிய அவசியம் என்ன..? எங்களிடம் பேசுவதால், சொற்பொழிவுகள் ஆற்றி உங்களது ஞானத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?"


யோகி சிரித்தார்.. "நான் பேசவேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எல்லாம் பேசத் தகுதியற்றவை..! அவற்றைப் பேசிப் பிரயோஜனம் இல்லை.."என்றார்.


"பரவாயில்லை குருவே.., நீங்கள் தகுதியுள்ளதாக நினைப்பதை பிரயோஜனம் உள்ளவற்றைமட்டுமாவது பேசலாமே..?"


"தகுதியுள்ளவற்றை யாரும் பேசவேண்டிய அவசியம் இல்லை..!"என்றார் யோகி. ஒரு நிமிடப் பேச்சு முடிந்தது. முப்பது வருட மௌனம் தொடங்கியது.


தன்னை உணர்ந்துவிட்ட ஞானியர்கள் பலர் இன்னும் மெளனமாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் பேசவேண்டிய அவசியமோ, யாரையும் தமது பக்கம் திருப்ப வேண்டிய அவசியமோ இல்லை.

No comments:

Post a Comment